Published On: 11:34 PM

2026 உலகக்கிண்ண கால்பந்து: ஓரிரு மாதங்களில் ஏல நடைமுறைகள்



2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்காக நாட்டினை தெரிவு செய்யும் ஏல நடைமுறைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என சர்வதேச கால்பந்து சபையின் புதிய தலைவர் கியானி இன்ஃபான்ரினோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சபை ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இடையில் நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற கால்பந்து போட்டிக்கு பின்னர் கருத்து தெரிவித்த இன்ஃபான்ரினோ, 2026 ஆம் ஆண்டுக்காள உலகக்கிண்ண போட்டி நாடுகள் தெரிவு தொடர்பிலும் கருத்துரைத்தார்.

இதன்போது, ‘ எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து சபையின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு முன்னதாக 2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான ஏல நடைமுறைகள் நடைபெறவேண்டும் என நினைக்கின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ரஷ்யா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் வரலாற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். இப்போட்டிகளை நடத்துவதற்கான நாடுகள் தெரிவு கடந்த 2010 ஆம் ஆண்டே இடம்பெற்றது. ஆனால் அதன் பின்னர் ஊழல் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. எனினும் இவ்விரு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளையும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.’ எனவும் இன்ஃபான்ரினோ குறிப்பிட்டுள்ளார்.

2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை ரஷ்யா மற்றும் கட்டாரில் நடத்துவதற்காக முடிவுகளை விசாரிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சபைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

Related News



comments powered by Disqus